
இராணிப்பேட்டை, ஜூன் 2:இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன், இ.ஆ.ப., அவர்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (02.06.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் (OP) பிரிவிற்கு நேரில் சென்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு வழங்கி வரும் சிகிச்சை முறைகள், நோயாளிகளின் வருகைப் பதிவு, மருந்து வழங்கும் நடைமுறைகள் மற்றும் மருத்துவ சேவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளிடம் நேரடியாக கலந்துரையாடி, மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகள், மருத்துவர்களின் சேவை, மருந்துகள் கிடைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு தரமான மற்றும் துரிதமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மருத்துவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்தினார்.மருத்துவமனையில் தூய்மை, சுகாதார பராமரிப்பு, காத்திருப்பு அறை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணித்து செயல்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் உஷா நந்தினி, குழந்தை நல மருத்துவர் மருத்துவர் சதீஷ் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்
கோபி
