Wed. Jul 29th, 2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் மே -26 வரை 89.00 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2026-2027ஆம் ஆண்டிற்கு 1,97,435 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவுதானியபயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 17.06.2026 வரை 2,090 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

2026-ஆம் ஆண்டிற்கு நெல்வகைகளான ஆடுதுறை-39, 57, 54, CO-55, வெள்ளைப்பொன்னி, VGD-1, BPT5204, RNR-15048, ஆகியவை 154.876 மெ.டன் இருப்பும், சிறுதானியங்களான ராகி, சோளம், சாமை, மக்காச்சோளம் கம்பு, திணை ஆகியவை 77.616 மெ.டன் இருப்பும், பயறுவகைகளான துவரை, உளுந்து, பச்சைபயறு, காராமணி, கொள்ளு, கொண்டகடலை ஆகியவை 134.344 மெ.டன் இருப்பும், எண்ணெய்வித்துக்களில் நிலக்கடலை, ஆமணக்கு 66.312 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2026-2027ஆம் ஆண்டிற்கு 1,088 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில், தற்பொழுது வரை 84.838 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர (2026-27) உரத்தேவை 67,270 மெட்ரிக்டன் என கணக்கிடப்பட்டுள்ளது.

9,560 மெட்ரிக்டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் மொபலிசிங் பாக்டீரியா, அசோஸ்பாஸ், ஜிங்க் சொலிபிலைசிங் பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் 2026-2027 ஆம் ஆண்டிற்கு நடப்பு மாதம் 23,055 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.

உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 7,746 விவசாயிகள் 7417.68 ஏக்கர் பரப்புபயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 2026-மே வரை பழங்கள், காய்கறிகள், வாசனை பயிர்கள், மலைப்பயிர்கள், மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள், பூக்கள் மற்றும் இதர பயிர்வகைகள் என மொத்தம் 777.00 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 01.04.2026 முதல் 31.05.2026 வரை நெல், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மா, காய்கறிகள், வழை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 53 விவசாயிகளுக்கு ரூ.53.26 இலட்சம் பயிர் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 8,449 குவிண்டாலும், கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1,52,814 குவிண்டாலும் சர்க்கரை இருப்பு உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மூலம் துறை வாரியான திட்ட விளக்க உரையாற்றப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் / மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.பிரியா, பாலக்கோடு சார்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ரூபன் சங்கர் ராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.கு.த.சரவணன், வேளாண் இணை இயக்குநர் திரு.பழனிசாமி, வேளாண் துணை இயக்குநர் திருமதி.சித்ரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்.

D. ராஜீவ் காந்தி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed