

பாலக்கோடு சர்க்கரை ஆலை குடியிருப்பில் ஸ்ரீ விஜயகணபதி, ஸ்ரீபாலமுருகன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பு பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விஜயகணபதி ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீ பழையூர் மாரியம்மன், ஸ்ரீஅஸ்வத்தநாராயண கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீ ஐயப்பன் ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகம் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு திருநெறி தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்திப் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைப்பெற்றது.
இந்த விழா நேற்று கொடியேற்றி கணபதி பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நாளான இன்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக் கலச நீராட்டு, ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, பூர்ணாஹநிதி நடந்தது. இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை பட்டாச்சியர்கள், ஊர் கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார்.

பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அருள்மிகு ஸ்ரீவிஜயகணபதி ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீபழையூர் மாரியம்மன், ஸ்ரீஅஸ்வத்தநாராயண கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீ ஐயப்பன், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்தவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.
பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.
வேலு
