

.தருமபுரி, ஜூன் 17:
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் பசலி 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் பார்வதி முன்னிலை வகித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இதில் வருவாய்த்துறை அதிகாரிகள், பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்வில் நிலப்பட்டா மாற்றம், புதிய பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகள், வருமானம், சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள், நில அளவை, எல்லைத் தகராறு, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஒவ்வொரு மனுவையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, தகுதியின் அடிப்படையில் விரைந்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் காலதாமதமின்றி தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அரசின் சேவைகள் மக்களை எளிதில் சென்றடைவதே இந்நிகழ்வின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் பார்வதி பேசுகையில், பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு பெறும் சிறந்த வாய்ப்பாக வருவாய் தீர்வாயம் அமைகிறது என்றார். பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.நிகழ்வில் வருவாய்த்துறை அலுவலர்கள், வட்ட அளவிலான அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினர்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் நேரடியாக சமர்ப்பித்து விளக்கங்களை பெற்றதுடன், பல மனுக்களுக்கு உடனடி வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பை வலுப்படுத்தும் வகையில் இந்த வருவாய் தீர்வாயம் பயனுள்ளதாக அமைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி
